சீன பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர்

அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்தார். சீன உளவு பலூன் பறக்கவிடப்பட்டது அமெரிக்க இறையாண்மைக்கு எதிரான திட்டமிட்ட தெளிவான அத்துமீறல் என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உளவு பலூன் 3 பெரிய பேருந்துகளை ஒன்றாக சேர்த்தது போன்ற அளவுக்குப் பெரியது என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இது குறித்து அதிகாரிகள், “அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

 

மேலும், மோண்டானாவில் காணப்பட்ட உளவு பலூன் போல் லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு உளவு பலூனை பார்த்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவோ அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக அறிவியல் காரணங்களுக்காக தாங்கள் அனுப்பிய விண் ஓடம் தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வழிக்குள் வந்துவிட்டது என்று தெரிவித்தது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்பதாக இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரைடர் நேற்று அளித்தப் பேட்டியில், “சீன உளவு பலூன் 18 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் அமெரிக்காவின் மத்தியப் பகுதியின் உயரே இருக்கிறது. இது இன்னும் ஓரிரு நாள் இங்கேயே சுற்றித் திரியலாம். உளவு நோக்கத்தில் தான் இந்த பலூன் வந்துள்ளது” என்றார்.

 

Please follow and like us: