கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்  

அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீ்ர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், அமைச்சர்கள், ஆளுநர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள், கல்வி போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது நாளொன்றுக்கு 40 அமெரிக்க டொலர் வீதம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நாளொன்றுக்கு 25 அமெரிக்க டொலர்கள் வீதம் 15 நாட்களுக்கு வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக அல்லது ஏனைய வெளிநாட்டு விவகாரங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அதை, அதிகபட்சம் 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 40 டொலர்களாக குறைப்பற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது.

மேலும், ஐந்து பிரிவுகளின் கீழ் முதல் மற்றும் இரண்டாவது வகை நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us: