இலங்கை, இந்திய, மாலைதீவு கடற்பிராந்திய மாசடைவை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வு

லங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மத்தியிலுள்ள ‘லக்ஷத்வீப்’ என்று அழைக்கப்படும் கடற்பிராந்தியம் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியளிக்கப்படும் ‘லக்ஷத்வீப் கடற்பிராந்தியம் மாசடைதலை தடுத்தல்’ என்ற செயற்றிட்டத்தின் கீழான கொள்கைசார் வட்ட மேசை மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச அபிவிருத்தி அமைப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாடு ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது விசேட உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜெனி கொரீயா நன்ஸ், கடல் மாசடைவு என்பது எல்லைகளை கடந்த பிரச்சினையாக இருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதாரமானது பகுதியளவில் அதன் கடல், கரையோர பிராந்தியத்தில் தங்கியிருக்கிறது என்பதை கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்குரிய தேசிய ரீதியான தீர்வுகள் குறித்து ஆராயவேண்டியது அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான ‘லக்ஷத்வீப் கடற்பிராந்தியம் மாசடைதலை தடுத்தல்’ என்ற செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பொருளாதாரம் சூழலுக்கு நேயமான முறையில் நிலைமாற்றம் அடைவதற்கும் தூய கடற்பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: