முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை ஆட்சேபித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (01) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மை சட்டவிரோதமான முறையில் கட்டாய விடுமுறையில் அனுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் அந்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும்கோரி பூஜித் ஜயசுந்தரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.