குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை

சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். அத்துடன் பொலிஸாரினால் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் அதுதொடர்பில் முறையிடுவதற்கு அச்சம் உள்ளவர்கள் 1985 என்ற துரித இலக்கத்தினூடாக அதிகாரசபைக்கு முறையிடலாம் என குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுகதகமலத் தெரிவித்தார்.
குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை2015இன் 4ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது சர்வதேச சட்டங்களுடன் தொடர்புபட்டதாகும்.
2015 மார்ச் 7ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டஇந்த அதிகாரசபை குற்றத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கும் குற்றவியல் வழக்குகளின் சாட்சியாளர்களுக்கும் உதவி வழங்கும் நிறுவனமாகும். இதுவரை பல சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி இருககிறோம்.
அதேபோன்று குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் எமக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக நீதிமன்றங்களினால் குறிப்பிட்டதாெரு தொகை அதிகாரைசபை நிதியத்துக்கு வழங்கப்படுகிறது.
பலவேறு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். அவர்களுக்கு முறையாக நட்டஈடு வழங்கப்படுவதில்லை. அதனால் இவர்கள் தொடர்பாகவும் ஆராந்து நட்டஈடு வழங்குவதும் இந்த அதிகாரசபைக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாகும்.
அத்துடன் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார். சாட்சியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள இவர்கள் தொடர்பில் அரசியலமைப்பில் விரைவிளக்கனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரசியலமைப்பின் 11ஆம் அல்லது 13 (1)ஆம் அல்லது 13 (2) ஆம் உறுப்புரைகளினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நபர் ஒருவர் என பொருள் படும்.
அதேபோன்று சாட்சாயாளர் என்றால், ஏதாவது ஒரு குற்றம் தொடர்பாகவோ அல்லது அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவோ அல்லது மனித உரிமை மீறல் தொடர்பாகவோ முறைப்பாட்டைச் செய்த நபர் ஒருவர் மேலும் ஒரு குற்றவியல் வழக்கில் அல்லது அடிப்படை உரிமை மீறல் தொடர்பான ஒரு வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு, அந்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க கூடாது என குற்றவாளியினால் அல்லது வேறு எவரேனும் ஒருவரினால் பலவந்தம் செய்யப்பட்டால், அந்த நபருக்கு இந்த அதிகாரசபையினால் பாதுகாப்பை கோர முடியும்.
அதேபோன்று குற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவுவதற்கும் பாதுகாப்பதற்குமான விசேட பொலிஸ் பிரிவு. கொழும்பு 12, மிஹிந்து மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ், இராணுவத்தினரால் மோசமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்கள்., இது தொடர்பில் முறையிடுவதற்கு அச்சம் உள்ளவர்கள் எமது அதிகாரசபையின் 1985 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடலாம் என்றார்.