Tuesday, February 18, 2025
HomeWorldநைஜரில் முன்னாள் அதிபரை சந்திக்க அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு.

நைஜரில் முன்னாள் அதிபரை சந்திக்க அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு.

மேற்கு ஆப்பிரிக்காவின் பெரிய நாடு நைஜர். அந்நாட்டில் ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற ஒரு ராணுவ புரட்சி மூலம் அங்கு பதவியில் இருந்த அதிபர் மொஹமத் பாஸோம் மாற்றப்பட்டு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி ஆட்சியை கைப்பற்றி தன்னை புதிய அதிபராக அறிவித்து கொண்டார். இந்த புதிய ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் நைஜர் நாட்டின் தலைநகர் நியாமே நகரில், புதிய ஆட்சியின் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் சென்றனர். ஆனால், இந்த பிரதிநிதிகளை தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியின் அதிபரும், ராணுவ அமைப்பின் தலைவருமான அப்துரஹ்மானே சியானி சந்திக்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற 3 ராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்றவரும், ராணுவ அமைப்பின் ஜெனரலுமான மூஸா ஸலாவ் பார்மோ (Gen. Moussa Salaou Barmou) ஆகியோர் மட்டுமே இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கத்தின் துணை செயலாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்திருப்பதாவது:- ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ராணுவ அமைப்பின் தலைவர்கள் எங்களை ஜனநாயகமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் நைஜர் அதிபரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் வீட்டு காவலில் இருப்பதாக நினைக்கிறோம். மீண்டும் மக்களாட்சிக்கு திரும்புவதற்கு அமெரிக்காவின் கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் இந்த கிளர்ச்சியாளர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

நைஜர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக செயல்படும் அவர்களின் வழிமுறையில் அவர்கள் தெளிவாக தொடர இருக்கிறார்கள். எங்கள் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக இருந்தாலும் சில நேரங்களில் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் கடினமாக இருந்தது. ஜனநாயகம் மீண்டும் திரும்பவில்லை என்றால் நைஜர் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகள் நிறுத்தப்படும் என தெரிவித்தோம்.

முன்னாள் அதிபர் மொஹமத் பாஸோம், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த எங்கள் அச்சங்களை தெரிவித்தோம். நாங்கள் புரிந்து கொண்ட வரையில் ரஷியாவின் ராணுவ மற்றும் கூலிப்படையாக செயல்படும் வாக்னர் அமைப்பின் உதவியை பெற்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என புதிய ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே அதை அவர்கள் கோரமாட்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments