Sunday, January 19, 2025
HomeSrilankaகாணி அபகரிப்பை நேரில் சென்று தடுத்து நிறுத்திய மனோ!

காணி அபகரிப்பை நேரில் சென்று தடுத்து நிறுத்திய மனோ!

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியைக் களத்துக்கு விரைந்த கொழும்பு மாவட்ட எம்.பியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் நேரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.  

மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியைச் சுற்றி முள்வேலி அமைத்து, அதற்குள் பெக்கோ மண்ணகழ்வு இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, குழி தோண்டி புதிய இறப்பர் கன்றுகளை நட்டு, புஸல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து, உள்குத்தகைக்குப் பெற்ற தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தது.  

 

இது பற்றி கட்சி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான குழுவினர் பெருந்தோட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தினர்.

இன்று முற்பகல் நடைபெற்ற சம்பவத்தின்போது, மனோ எம்.பியுடன் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், பாலசுரேஷ் குமார், பிரியாணி குணரத்ன, பாலச்சந்திரன் அப்பாதுரை, எஸ். தங்கதுரை மற்றும் மோசஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் செல்லும் முன், முதலில் அவிசாவளை பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலாளர் தில்ஹானியை சந்தித்த மனோ எம்.பி., மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி உள்ளதாக பிரதேச செயலாளரைக் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துக் கூறிய மனோ கணேசன் எம்.பி. தெரிவித்ததாவது:-

“நல்லாட்சியின்போது கொழும்பு – அவிசாவளை பென்றித் தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் அங்கு விபத்து ஏற்பட்டு, அயல் குடியிருப்பு மக்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்தனர். இதனால் மாற்று இடம் ஏற்பாடு செய்து, அதற்காக நான்கு ஏக்கர் காணியை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து நான் பெற்றேன். அதற்கான நிதியும் எனது அமைச்சால் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதைப் பயன்படுத்தியே இங்கே வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கி தரப்பட்ட இந்த நான்கு ஏக்கர் காணியைத் தோட்ட நிறுவனம் தந்திரமாக அபகரிக்க முயன்றுள்ளது.

ஒருவேளை நான் மீண்டும் அமைச்சராகி இதைச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், எனக்கு எதிரணியும் ஒன்றுதான். ஆளும் அணியும் ஒன்றுதான் என்று இன்று இங்கே இந்த அதிகாரிகளிடம் கூறினேன்.  

தற்போது இந்தத் துர்முயற்சி நிறுத்தபட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கலந்துரையாடி காணித் துண்டுகளைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நாம் பிரித்து வழங்குவோம்.” – என்றார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments