Saturday, February 15, 2025
HomeWorldFrance Newsபிரான்சில் குறுந்தூர விமான சேவைகளுக்கு தடை

பிரான்சில் குறுந்தூர விமான சேவைகளுக்கு தடை

குறுந்தூர உள்ளூர் விமான சேவைகளுக்கு பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக தடை அமுலுக்கு வந்துள்ளது விமானங்களால் வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரங்களுக்கான உள்ளூர் விமானப் பயணங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பாரிஸுக்கும் லியோன், நொன்ட், போடோவ் முதலான முக்கிய பிராந்திய நகரங்கள் பலவற்றுக்கும் இடையிலான விமான சேவைகளில் பெரும்பாலானவற்றை இல்லாமலாக்கி விடும் எனக் கருதப்படுகிறது.

இதற்கான சட்டம் 2 வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனினால் நியமிக்கப்பட்ட 150 பொதுமக்களையும் உள்ளடக்கிய, காலநிலை தொடர்பான பிரெஞ்சு பிரஜைகள் சமவாயம் எனும் அமைப்பானது, 4 மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கான விமானப் பயணங்களை நீக்க வேண்டும் என சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இரண்டரை மணித்தியாலங்களுக்குள் ரயில் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கான விமானப் பயணங்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் தடை செய்துள்ளது.

‘எயார்லைன்ஸ் ஃபோர் யூரோப்’ (A4E) எனும் ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்களின் சங்கத்தின் இடைக்காலத் தலைவர் லோர் டொசீல் இது தொடர்பாக கூறுகையில், இத்தடையானது காபனீரொட்சைட் வெளியேற்றத்தில், குறைந்தளவு தாக்கத்தையே ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

இவ்விடயத்தில் உண்மையான, குறிப்பிடத்தக்க தீர்வுகளுக்கு அரசாங்கங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments